Sunday, July 10, 2011

சிப்ஸ் பீட்சா உருவாக்கும் கொழுப்பு அடிமைகள்




வாஷிங்டன்: சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் சுரப்பிகளின் இயக்கம் தாறுமாறாகும். மூளையின் செயல்பாடுகள் படிப்படியாக பாதிக்கப்படும் என்று லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கிறது. கொழுப்பு உணவுகளுக்கு அடிமையாகிற அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



இட்லி, தோசையை விட்டு விலகி வர யோசிக்கிற ஒரு சில பெரியவர்களை விட இதர ரகத்தினர் எல்லாரையும் வசீகரித்திருப்பவை சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் புட்கள். உடல்நலத்துக்கு இவை அவ்வளவு நல்லதல்ல என்று அவ்வப்போது தகவல்கள் வெளியானபோதும், இவற்றை விட மனம் வருவதில்லை. ஜங்க் உணவுகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் பல்கலைக்கழகம், நேஷனல் அகடமி ஆப் சயின்சஸ் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. இதில் தெரியவந்த தகவல்கள்:


ஜங்க் உணவுகளில் கூடுதல் சுவைக்காக பல விதங்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அதிகம் சேர்ந்தால் உடல்நலம் பாதிக்கும். எதிர்ப்பு சக்தி பெருமளவு குறையும். ‘பயாலஜிகல் மெக்கானிசம்’ என்ற உடலின் இயல்பு நிலை பாதிக்கப்படும். என்டோகெனாபினாய்ட்ஸ் என்ற ஒரு விதமான ரசாயன சுரப்பு உடலில் அதிகரிக்கும். இது அதிக கொழுப்புள்ள உணவுகளை நாடும் தன்மை கொண்டது. இதனால் அத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் அதிகமாகும். செரிமான கோளாறு ஏற்படும்.


இந்த நிலை தொடர்ந்தால் உடலில் இயற்கை சுரப்பிகள் பாதிக்கப்படும். மூளைக்கு ஒழுங்காக சென்றுகொண்டிருக்கும் சிக்னல்கள் பாதிக்கப்பட்டு, உடலின் இதர செயல்பாடுகளும் படிப்படியாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகும்.


எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜங்க் உணவுகளில் அதிகம் இருக்கும் ரசாயன பொருட்களை ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு, எலிகளின் உடலில் என்டோகெனாபினாய்ட்ஸ் அளவு அதிகரித்திருந்தது. அதன் பிறகு, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை மேலும் மேலும் விரும்பி தின்றன. எலியின் இயல்பான செயல்பாடுகள் படிப்படியாக குறைந்தன. போதை பழக்கத்துக்கு அடிமையானதை போல முடங்கி கிடந்தன. மீண்டும் ஜங்க் புட் ரசாயனம் நீக்கப்பட்ட பிறகு, எலிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.


இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.





No comments:

Post a Comment