மாதுளையில் பல்வேறு மருத்துவ குணங்கள்
எடின்பர்க்: ஆபீஸ் டென்ஷன், வீட்டு டென்ஷன், பரபரப்பு, படபடப்பு, எரிச்சல்.. ஆகியவற்றை மாதுளை ஜூஸ் தீர்க்கிறது என்பது லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ளது குயீன் மார்கரெட் பல்கலைக்கழகம். இங்கு பேராசிரியர் எமட் அல் துஜைலி தலைமையில் சமீபத்தில் மாதுளையின் பயன்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக சிலர் தேர்வு செய்யப்பட்டனர். வீடு, அலுவலகத்தில் வேலைகளுக்கு நடுவே தினமும் அரை லிட்டர் மாதுளை ஜூஸ் குடிக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. ஜூஸ் குடிப்பதற்கு முன்பும் குடித்த பிறகும் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களது மனநிலை, மகிழ்ச்சி, படபடப்பு தன்மை ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுமாறும் கூறப்பட்டது.
2 வார காலத்துக்கு ஆய்வு நடந்தது. ஆய்வு தொடங்கும் முன்பும் 2 வாரம் கழித்தும் இதயத் துடிப்பு, பி.பீ., பல்ஸ் உள்பட எல்லா சோதனைகளும் செய்யப்பட்டன. அவர்களது படபடப்பு, பதற்றம் ஆகியவை கணிசமான அளவு குறைந்திருந்தன. இதுபற்றி பேராசிரியர் அல் துஜைலி மேலும் கூறியதாவது: மாதுளையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதையும் அது உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதையும் தொடர் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. மாதுளை சாறு மனஉளைச்சலுக்கும் மருந்தாகிறது என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதயத்துடிப்பை மாதுளை ஜூஸ் சீராக்குகிறது.
வீட்டிலும் அலுவலகங்களிலும் ஏற்படும் படபடப்பு, பதற்றத்தை தணிக்கிறது. மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. இதன்மூலம், ஒரு செயலை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை, நேர்மறை எண்ணம் அதிகரிக்கிறது. ஆய்வில் மாதுளை ஜூஸ் குடித்த போது மிகவும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக, நல்ல மூடில் இருந்ததாக எல்லாரும் கூறினர். எந்நேரமும் பரபரப்பான சூழ்நிலையில் வேலை செய்கிறவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாதுளை ஜூஸ் சிறந்த மருந்து. இவ்வாறு அல் துஜைலி கூறினார்.
No comments:
Post a Comment